நிதி வழங்கிய இரவுக் காவலருக்கு புத்தகம் பரிசளித்த முதல்வர் ஸ்டாலின். 
தமிழகம்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் ரூ.10,101-ஐ வழங்கிய இரவுக் காவலர்; புத்தகம் பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தன் ஒரு மாத ஊதியம் ரூ.10,101-ஐ வழங்கிய இரவுக் காவலருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 14) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் 'கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னை, சாலிகிராமத்தில், தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணிபுரிந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தங்கதுரை (வயது 59), தனது ஒரு மாத சம்பளத்தை, பொதுப் போக்குவரத்து தற்போது இல்லாத சூழ்நிலையில், மிதிவண்டியில் வந்து, முதல்வரை நேரில் சந்தித்து வழங்க முயற்சித்தார்.

ஆனால், முதல்வரின் அலுவல் பணி காரணமாக, அவரை நேரில் சந்தித்து வழங்க இயலாததால், தனது ஒரு மாத ஊதியமான ரூ.10,101-ஐ அரசுக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதை அறிந்த முதல்வர், தங்கதுரையை இன்று நேரில் அழைத்து, நிதி வழங்கியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, அவருக்கு தனது அன்புப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT