தமிழகம்

உதகை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து அஸ்ஸாமில் உள்ள சாட்சியிடம் காணொலி மூலம் விசாரணை

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை, உதகை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சாட்சியிடம் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி அருணாச்சலம் விசாரணை நடத்தினார்.

கரோனா பரவல் காலகட்டத்தில் புதிய முயற்சியாக காணொலிக்காட்சி மூலம் சாட்சியிடம் விசாரணைநடத்தப்பட்டது. உதகை மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பிஎஸ்என்எல்அலுவலகத்தில் ரூ.2 லட்சம் அளவில் முறைகேடு நடந்துள்ள தாக, விஜய் பிள்ளை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2001-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு,63 சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. சேரம்பாடியில் தொடர்புடைய அலுவலகத்தில் பணிபுரிந்த உஜ்வல் என்பவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இவர், இந்த வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருந்தார். கரோனா பரவலால் உதகைக்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உஜ்வலுக்கு உள்ள சிரமத்தை உணர்ந்த நீதிபதி அருணாச்சலம், காணொலிக் காட்சி மூலம் சாட்சியிடம் விசாரணை மேற் கொள்ள முடிவு செய்தார்.

அஸ்ஸாம் உயர்நீதிமன்றத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்து, நேற்று (மே 12) காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தினார். கரோனா பரவலால் யாருக்கும் பாதிப்பில்லாமல் காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தப்படுவது, வரவேற்கத்தக்கது. இதனால், மக்களின் சிரமம் தவிர்க்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT