கல்லணைக் கால்வாயில் கான் கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி, அந்த பணிகளை நிறுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் தலைவர் தங்கராசு, தேசிய மக்கள் சக்தி கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் பனசை அரங்கன், தகவல் உரிமை சட்ட ஆர்வலர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
148.43 கி.மீ நீளமுடைய கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணி பிப்.2-ம் தேதி பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோரால் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுக்கு 6 மாதங்களில் நீர்வரத்தை கொண்டுள்ள இக்கால்வாய், நீர்வரத்து அல்லாத மீதமுள்ள மாதங்களில், அப்பகுதியி லுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கான நிலத்தடி நீரை வழங்கி வருகிறது.
ஆனால், தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணியில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால், நீர் பூமிக்குள் செல்ல வாய்ப்பில்லை. இதன் மூலம் நிலத்தடி நீர்ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கால்வாயில் கான்கிரீட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால், முழு கொள்ளளவான 4,200 கன அடி நீர் கால்வாயில் செல்ல முடியாது. இதனால், வெள்ளத்தைத் தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற் படும். எனவே, கல்லணைக் கால்வாயில் தற்போது 20 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில், தரைதளத்தில் கான்கிரீட் தளம் அமைக்காமல், கரைகளின் பக்கவாட்டு பகுதிகள், பாலங்கள், படித்துறைகளை கான்கிரீட் கட்டுமானத்தால் பலப்படுத்தி, பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவின் நகலை தமிழக முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சருக்கும் அனுப்பி உள்ளனர்.