தமிழகம்

விருதுநகரில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை: நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்

இ.மணிகண்டன்

விருதுநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே சுற்றி வருவதால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு காய்கறி சந்தை இன்று இடமாற்றம் செய்யப்பட்டது.

விருதுநகர் பஜாரில் 150க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் பஜாரில் காய்கறி வாங்க பொதுமக்கள் கூட்டம் கூடுகின்றனர்.

இதனால் மேலும் நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் பஜாரில் உள்ள காய்கறிக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் உத்தரவிட்டனர்.

மேலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் காய்கறிச் சந்தை அமைக்கவும் வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், விருதுநகர் பஜாரில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் இன்று முதல் அடைக்கப்பட்டன. அங்கிருந்த காய்கறிக் கடைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

போதிய இட வசதி இருந்ததால் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஆனாலும், வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

பகல் 12 மணிக்கு மேலும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து காய்கறி மார்க்கெட் இயங்கியது. தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய பின்னரே காய்கறி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

விருதுநகர் பஜாரில் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டபோதும் மளிகை மற்றும் பலசரக்கு வாங்குவதற்காக பஜாரில் ஏராளமானோர் குவிந்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் அது விருதுநகரில் நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை. அத்தியாவசியப் பணிக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியும் வழக்கம்போல் அனைத்து இடங்களில் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிகிறது.

இதேபோன்று, விருதுநகரில் மட்டுமின்றி, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் வழக்கம்போலவே காணப்படுகிறது. அரசு எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் ஊரடங்கு அமல்படுத்தினாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

SCROLL FOR NEXT