பொது முடக்கக் காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினருக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்க வேண்டும் எனத் தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய சிறு தொழில்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலாளர் எம்.வி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முன்னுரிமை பெற்ற துறையாக விளங்கி வருகிறது. நாட்டில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தொழில் துறை முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் சுமார் 23.60 லட்சம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 151.61 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தத் தொழில்கள் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 241 கோடி முதலீட்டில் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 6 ஆயிரம் வகையான பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனா என்ற கொடிய நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.
வங்கிகள் மூலம் கரோனா சிறப்புக் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. அந்தக் கடனுக்கான வட்டி மட்டுமே இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்தக் கடனுக்கான அசல் தொகை செலுத்த வேண்டிய காலம் தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா 2-வது அலை பரவல் காரணமாக மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழில் துறை மீண்டும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழில் முனைவோர்களுக்கு கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.
ஆகவே, கரோனா கடன் உதவிக்கான அசல் தொகையை வசூலிக்கும் காலத்தை மீண்டும் தள்ளிவைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்கம் காலத்துக்கு தொழில் கூடங்களுக்கான உயர் மின் அழுத்தக் கோரிக்கை கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இது தவிர மின்சாரத்துக்கு நிலையான கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்ய தாமதக் கட்டணம் பெறக்கூடாது. அதேபோல, அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொழில் துறையினருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்குத் தொழில் வரி, சொத்துவரியில் இருந்தும் விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தாய்கோ வங்கி, அரசு வங்கிகளில் பெற்ற கடன் தொகைளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி புதுப்பித்தலில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்’’.
இவ்வாறு சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.