தமிழகம்

புதுச்சேரியில் மே 24 வரை அனைத்து மதுக்கடைகளும் மூடல்

அ.முன்னடியான்

புதுச்சேரியில் மே 24-ம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று (மே 10) நள்ளிரவு முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இதனிடையே கரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே 10-ம் தேதி நள்ளிரவு வரை அனைத்து விதமான மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அது வருகின்ற 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ''புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புதுச்சேரியில் உள்ள மது, சாராய, கள் கடைகள், எஃப்எல் 1, எஃப்எல் 2 சுற்றுலாப் பிரிவின் கீழ் உணவகங்கள் என அனைத்துவிதமான மதுக்கடைகளும் வரும் 24-ம் தேதி நள்ளிரவு வரை முழுமையாக மீண்டும் மூடப்படும். விதிமுறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். விதிகளை மீறினால் கலால்துறை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT