தமிழகம்

முதியோர், விதவையருக்கு ரூ.500 கூடுதல் உதவித் தொகை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலத்தில் முதியோர், ஆதவற்ற பெண்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நிலவி வரும் கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் பாதிப்பை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் ஓய்வூதியத் தொகை ரூ.500 கூடுதலாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் 2-ம் அலை கரோனா தொற்றினால், பொதுவாகமக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக, வயதான ஓய்வூதியம் பெறுபவர்கள், அவர்களது உடல் நலம், நிதி மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பல சிக்கல்களை எதிர்கொள்வதை முன்னிட்டும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், முதியோர் ஓய்வூதியத்தில் ரூ.500 சேர்த்து கொடுக்கப்பட உள்ளது.

மாதாந்திர நிதி உதவி

முதியவர்கள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், திருமணமாகாத வயது முதிர்ந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர், புதுச்சேரி அரசின் முதியோர் உதவித் திட்டத்தில் மாதாந்திர நிதி உதவி பெறுகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 பேர் பயன்பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும், தற்போது ரூ.500 கூடுதலாக வழங்கப்படுவதால், புதுச்சேரி அரசுக்கு ரூ.7 கோடியே 74 லட்சத்து 23 ஆயிரத்து 500 கூடுதல் செலவினம் ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT