அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் மீது ட்ரோன் மூலம் ரசாயன மருந்து தெளிக்கப்படுகிறது. 
தமிழகம்

தமிழகத்திலேயே முதல்முறை: ஜெயங்கொண்டம் பகுதியில் ட்ரோன் மூலம் சீமைக்கருவேல செடிகள் அழிப்பு

பெ.பாரதி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் ட்ரோன் மூலம் சீமைக்கருவேல செடிகள் அழிப்புப் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஜெயங்கொண்டம் நகரப் பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க, ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் மருந்து தெளிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சோழன் சிட்டி லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

ஆளில்லா விமானம் மூலம் கருவேல மரங்களுக்கு ரசாயன மருந்து தெளித்து அழிக்கும் பணியை உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் அமர்நாத் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், (கிராம ஊராட்சி) குருநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, செல்வம் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.

ஆளில்லா விமானத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் வருண்குமார் தலைமையிலான சவுந்தர ரங்கபாண்டி, தங்கராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இயக்கினர். ஜெயங்கொண்டம் நகரைச் சுற்றி பல்வேறு இடங்களில் உள்ள கருவேல செடிகளை அழிப்பதற்காக மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனைக் காணொலிக் காட்சி மூலம் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டார். அவர் காணொலி வாயிலாகச் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உலக அளவில் ட்ரோன் மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ட்ரோன் மூலம் விவசாயத்துக்கும், மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்கள், பார்த்தீனியச் செடிகள் உள்ளிட்ட தேவையற்ற மரம், செடிகளை அழிப்பதிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் அண்ணா பல்கலைக்கழக மற்றும் ஐஐடி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். 15 நாட்களில் சீமைக் கருவேல செடிகள் இறந்து விடும். அதன் பின்னர், அனைத்தும் அப்புறப்படுத்தப்படும்.

சோதனை முறையில் தமிழகத்திலேயே முதல்முறையாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெறும் இப்பணி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பின், அரசிடம் இத்திட்டம் குறித்துத் தெரிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்'' என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT