தமிழகம்

சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய ஆளில்லா குட்டி விமானங்கள்

ஆர்.ஸ்ரீகாந்த்

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்த மக்களை கண்டறிய குட்டி விமானங்கள் பெரிதும் உதவி புரிந்ததாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்தனர்.

நந்தம்பாக்கம் டிஃபன்ஸ் காலனி, முடிச்சூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, சின்னமலை ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளான 200க்கும் அதிகமானோரை கண்டறிந்து உதவிகளை அளிக்க குட்டி விமானங்கள் மிகப் பெரிய அளவில் உதவி புரிந்தன.

இந்த குட்டி விமானங்கள் அனைத்தும் நடமாடும் வாகனங்களில் இயங்கிய செயற்பாட்டு மையங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, குட்டி விமானங்களின் சிக்னல்களின் மூலம் வாக்கி-டாக்கியின் உதவியோடு தன்னார்வலர்களை தொடர்புகொண்டு உதவி தேவைப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக மீட்புப் பணியில் இருந்த சென்னை மாநகர போலீஸார் தெரிவித்தனர்.

உடல்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களைத் தாண்டி பல்வேறு பகுதிகளிலிருந்து 6 உடல்களும் மீட்கப்பட்டன. அசோக் நகர் டாங்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குட்டிவிமானம் கண்டறிந்ததன் மூலமாக சில உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு பெண் உட்பட 3 பேரின் உடல்கள் இங்கு கண்டறியப்பட்டன. இவர்கள் சூளைப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் வெள்ள நீரால் இங்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (55). இவரது உடலும் குட்டி விமானத்தின் உதவியோடு கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. திருப்போரூரிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது வெள்ளம் சூழ்ந்து இவர் பலியானார். இவரது உடலை மீட்பு பணியில் இருந்த போலீஸார் திருவிடந்தை அருகே ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

SCROLL FOR NEXT