பழநி அடிவாரப் பகுதியில் ஒரு வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நள்ளிரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதை விழித்திருந்து பலரும் கண்டு ரசித்தனர்.
பழநி மலையடிவாரப் பகுதி யில் வசிக்கும் ராஜா என்பவர் தனது வீட்டில் உள்ள மாடித் தோட்டத்தில் பல்வேறு மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார். இதில் பிரம்ம கமலம் செடியும் வளர்க்கிறார். கடந்த ஆண்டு ஒரு பூ மட்டுமே பூத்த நிலையில், இந்த ஆண்டு 3 பூக்கள் பூத்தன. பிரம்ம கமலம் மலரின் சிறப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். அதுவும் இரவு 7 மணிக்கு மொட்டாக இருக்கும் பூ, படிப்படியாக நள்ளிரவில் முழுமையாகப் பூக்கும், நேரம் செல்ல செல்ல விடிவதற்குள் பூ வாடிவிடும்.
இதன் தாயகம் அமெரிக்கா. ‘எபிபைலம் ஆக்ஸிபெட்டலம்’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையைச் சேர்ந்த தாவரம் இது. ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் பரவலாக வளர்ப்பு தாவரமாக காணப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத் தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பும் கொண்டது.
இதை வளர்ப்பதற்கு விதை, செடிக்கு பதிலாக இதன் இலையை நட்டு வைத்தாலே வளரக்கூடிய தன்மை கொண்டது. இந்தச் செடியை வளர்ப்பவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெண்மை நிறத்தில் பிரம்ம கமலம் பூ பூக்கும் நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து பூ பூக்கும் காட்சியை படிப்படியாக கண்டு ரசிப்பர். பின்னர் அதைப் பறித்து சுவாமிக்கு வைத்து வணங்குவர்.