செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகள் 13 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள 480 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பற்றாக்குறையை அடுத்த ஆக்சிஜன் அளவை குறைவாக கொடுத்தாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 கரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.