செங்கல்பட்டு அருகில் 105 ஏக்கர் அரசு நிலத்தைத் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஜூன் 10ஆம் தேதிக்குள் இதுகுறித்த ஆரம்பக்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள கருங்குழிபள்ளம் எனும் கிராமத்தில் உள்ள 105 ஏக்கர் அரசு நிலம் 53 தனி நபர்களுக்குப் பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நில அபகரிப்பு குறித்து டிஜிபியிடம் புகார் அளித்தபோது, அப்புகாரை நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவுக்கு அனுப்பாமல், திருப்போரூர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நில அபகரிப்பில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிவானந்தமும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மனுதாரர், தனது புகாரின் அடிப்படையில் காவல்துறை உரிய பிரிவில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், நில அபகரிப்புப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தவறாக வழங்கப்பட்ட இந்தப் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 105 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்குத் தவறுதலாகப் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பக்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.