தமிழகம்

நெருக்கடியான காலகட்டத்தில் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள்: ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து 

செய்திப்பிரிவு

நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் வெளியிட்ட ட்வீட்டில், ''பெருவெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு மனபூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாகச் செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், '' 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT