சட்டப்பேரவைத் தேர்தலில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திமுக வேட்பாளர் தேவராஜிடம் 1,243 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி 3-வது முறையாகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திருப்பத்தூர் திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் போட்டியிட்டார்.
அமைச்சர் கே.சி.வீரமணியும், திமுக வேட்பாளர் தேவராஜும் ஒரே சமூத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமூக ஓட்டுகளை நம்பியே களம் இறங்கினர். அமைச்சர் கே.சி.வீரமணி தனது தனிப்பட்ட செல்வாக்கால் 3-வது முறையும் வெற்றி பெறுவார் என அதிமுகவினரும், தோழமைக் கட்சியினரும் நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றி வந்தனர்.
அமைச்சர் கே.சி.வீரமணியின் நெருங்கிய உறவினரான தென்னரசு சாம்ராஜ் என்பவர் அமமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்துப் போட்டியிட்டார். அவர் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கினார். இதையடுத்து, அமமுக கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை மூளைச்சலவை செய்த அமைச்சர் கே.சி.வீரமணி, அக்கட்சியைச் சேர்ந்தவர்களைத் தன்வசம் இழுத்தார்.
இதனால், அமமுக வாக்கும், அதிமுக கூட்டணி வாக்குகளும் தனக்கு எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுக்கும் என அமைச்சர் கே.சி.வீரமணி எண்ணினார். இதனால், தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நேரடிப் போட்டி காணப்பட்டது. வாக்குப் பதிவுக்கு முன்பும் சரி, பிறகும் சரி ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணியே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை மக்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர்.
முதலில் தபால் வாக்கில் திமுக வேட்பாளர் தேவராஜ் 1,187 வாக்குகளும், அமைச்சர் கே.சி.வீரமணி 949 வாக்குகளும் பெற்றனர். இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 4-ம் சுற்று வரை அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலை வகித்தார். இதனால், அதிமுகவினர் உற்சாகமாகக் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 5-வது சுற்றில் திமுக வேட்பாளர் தேவராஜ் முந்தினார்.
அதன் பிறகு அனைத்துச் சுற்றிலும் அமைச்சர் கே.சி.வீரமணியை ஓரங்கட்டிய திமுக வேட்பாளர் தேவராஜ் இறுதிச்சுற்றில் 1,243 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். இதனால், திமுகவினர் உற்சாகமடைந்தனர். அமைச்சர் கே.சி.வீரமணி வெற்றி பெறுவார் என எண்ணிய அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு அமைதியாக வெளியேறினர்.
1. கே.தேவராஜ் (திமுக) : 89,277
2. கே.சி.வீரமணி (அதிமுக) : 88,152
3. ஏ. சிவா (நாம் தமிழர் கட்சி) : 13,305
4. ஆர்.கருணாநிதி (சுயேச்சை) : 1,065
5. எஸ்.காளஸ்திரி (உழவர் உழைப்பாளர் கட்சி) : 869
6. நோட்டா: 1,327
திமுக வேட்பாளர் கே.தேவராஜ், அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணியை விட 1,125 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஜோலார்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அதிமுக அமைச்சராகவும் இடம்பிடித்த கே.சி.வீரமணி முதல் முறையாகத் தோல்வியடைந்திருப்பது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.