புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாஹே தொகுதியில் காங்கிரஸும், காமராஜர் நகரில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு, அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்கள் என, 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று (மே. 2) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் மாநிலம் முழுவதும் பதிவான 17 ஆயிரத்து 124 தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் 1,400 வாக்கு எண்ணும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தபால் வாக்குகள் அடிப்படையில் என்.ஆர்.காங் தலைமையிலான கூட்டணி 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
இதில் மாஹே தொகுதியில் காங்கிரஸும், காமராஜர் நகர் தொகுதியில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.
மாஹே தொகுதி நிலவரம்:
முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை
ரமேஷ் பரம்பத் (காங்கிரஸ்)-1,285
ஹரி தாஸ் (சுயேச்சை) 1,139
அப்துல் ரகுமான் (என்.ஆர்.காங்கிரஸ்)- 491
காமராஜர் நகர் தொகுதி:
முதல் சுற்றில் பாஜக முன்னிலை
ஜான்குமார் (பாஜக) 3,849 வாக்குகள்
ஷாஜகான்(காங்) 2,132 வாக்குகள்.