கரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றியும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ள ஸ்டாலின், முன்களப் பணியாளர்களுக்கு இச்சமூகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மே தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த, மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவுத் தூண் மாதிரி வடிவமைப்பிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தனது முகநூல் பக்கத்தில் மே தின வாழ்த்தாக முன்களப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்திப் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு:
“கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள் - செவிலியர்கள் - தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துகள். என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.