தமிழகம்

பாதுகாப்பு பணிக்குச் செல்லும் இடங்களில் மரக்கன்றுகளை நடும் 2 பெண் காவலர்கள்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூரைச் சேர்ந்த காவலர்கள் கலைவாணி(38), அகிலா(29) ஆகிய இருவரும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பதில் தனி ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தற்போது, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள இருவரும், அலுவலக வளாகத்தில் நேற்று 10 மகிழம் மரக்கன்றுகளை நட்டனர்.

இதுகுறித்து காவலர்கள் கலைவாணி, அகிலா ஆகியோர் கூறியது:

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கொள்கையின்படி நாங்கள் அவ்வப்போது மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். அண்மையில் நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்தபோது, அவரது கனவை நனவாக்கும் விதமாக எங்கள் வீட்டிலேயே மரக்கன்றுகளை நட்டோம்.

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால், அங்கு அவர்களுக்கு பரிசுப் பொருளாக மரக்கன்றுகளைக் கொடுத்து, மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

அதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் நாங்கள் பாதுகாப்பு பணிக்காகச் செல்லும் இடங்களில், அங்குள்ள வசதிக்கு ஏற்ப எங்களின் சொந்தச் செலவில் மரக்கன்றுகளை நடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் 200 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். தற்போது, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு போதிய இடம் இருந்ததால் மருத்துவ குணம் மிகுந்த மகிழம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT