தமிழகம்

பாளை. சிறையில் கொலையான கைதியின் உடலை வாங்க வேண்டும்: உறவினர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த பாபநாசம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிறைக் கைதி முத்து மனோ மற்றும் அவரது நண்பர்களை மற்ற கைதிகள் தாக்கினர். இதில் முத்து மனோ கொலை செய்யப்பட்டார்.

அவர் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முத்து மனோவின் உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்யவும், அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும், கைதிகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத சிறைத்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முத்துமனோ கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முத்து மனோவின் உடலை பெற்று இறுதி சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியது. அதன் பிறகும் முத்து மனோவின் உடலை உறவினர்கள் வாங்கவில்லை.

இது தொடர்பாக பேலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்து, முத்து மனோவின் உடலை அவரது உறவினர்கள் நாளைக்குள் (மே 1) வாங்கிச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT