திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று மாலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளான வள்ளியூர், பணகுடி, பழவூர், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், ராதாபுரம், தெற்கு கள்ளிகுளம், விஜயாபதி, கூட்டப்புளி, ஆவுடையாள்புரம், இருக்கன்துறை மற்றும் கடலோர கிராமங் களில் நேற்று பிற்பகல் 3.38 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. 3 விநாடிகளுக்கு நீடித்தஇந்த நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.
பதற்றத்துடன் காணப்பட்ட அவர்கள் சிறிது நேரத்துக்குப்பின் நிலைமை சீரடைந்ததை அடுத்து,வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமாக கடலோரப் பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம்,சுசீந்திரம், மருங்கூர், அஞ்சுகிராமம் பகுதிகளில் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் சிறுஅசைவு தென்பட்டதை உணர்ந்தமக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கொட்டாரத்தை சேர்ந்த மக்கள் கூறும்போது, “நிலஅதிர்வால் சுவர்களில் கீறல் எதுவும் விழவில்லை. வீடுகளில் உள்ள பொருட்கள் கீழே விழவில்லை. சுமார் 5 விநாடி நில அதிர்வை உணர முடிந்தது” என்றனர்.