சென்னையில் கரோனா சிகிச்சையைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரியான தரேஸ் அகமது என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்க உள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஏப். 27) நிலவரப்படி, 15 ஆயிரத்து 830 பேருக்கு தமிழகம் முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 4,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் 4,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், திருவிக நகர், ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கரோனா சிகிச்சையைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரியான தரேஸ் அகமது என்பவர் இன்று (ஏப். 28) தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.