கிருஷ்ணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

மே 2-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்குக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தைத் தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் எனத் தேர்தல் அறிவிப்பின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததாகவும், இருந்தபோதும் தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பணப் பட்டுவாடா நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல தொகுதிகளில் நடந்த பணப் பட்டுவாடா தொடர்பாக, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பணப் பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து, விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் அளித்த புகாரைப் பரிசீலிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT