தமிழகம்

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,258 பேருக்கு கரோனா; 10 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று புதிய உச்சமாக 1,258 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பெண்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று(ஏப். 28) வெளியிட்ட தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,833 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 997, காரைக்கால் - 96, ஏனாம் - 125, மாஹே - 40 பேர் என மொத்தம் 1,258 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 9 பேர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவற்றில் 7 பெண்கள் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.39 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரத்து 305 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் 262 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 290 பேரும், கோவிட் கேர் சென்டரில் 808 பேர் என 1,360 பேர், காரைக்காலில் 48 பேர், ஏனாமில் 171 பேர், மாஹேவில் 33 பேர் என 1,612 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 5,429 பேர், காரைக்காலில் 784 பேர், ஏனாமில் 341 பேர், மாஹேவில் 278 பேர் என 6,832 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 632 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 80 (83.62 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரத்து 162 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 35 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 73 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’

இவ்வாறு சுகாதாரத்துறை தகவலில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT