பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல்: தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

முதல் கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

"இந்தியாவிலேயே அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை (27.04.2021), 55.51 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தவாறு, இலவசமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT