தமிழகம்

மறைமலைநகர் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் மேலும் 6 பேர் சரண்: ஏப்.30 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு

செய்திப்பிரிவு

மறைமலை நகரில் அதிமுக பிரமுகர் திருமாறன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் நேற்று மேலும் 6 பேர் சரணடைந்தனர்.

செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன்(50). அதிமுக பிரமுகரான இவர், மறைமலைநகர், பெரும்புதூர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த 24-ம் தேதி வீட்டருகே உள்ள கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தது.

காவலர் சுட்டு ஒருவர் உயிரிழப்பு

அப்போது திருமாறனின் பாதுகாவலரான எழிலரசன், துப்பாக்கியால் சுட்டதில், திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தசுரேஷ்(19) என்பவர் இறந்தார். மற்றவர்கள் தப்பினர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த மறைமலை நகர் வ.உ.சி தெருவைச் சேர்ந்த சின்ன கிருஷ்ணசாமி மகன் ராஜேஷ்(48) என்பவர் நேற்று முன்தினம் திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சரண்(20), தனுஷ் (26), குணசேகரன் (21),முருகன் (20), முகேஷ் (32), அஜித் (21) ஆகிய 6 பேர் நேற்று திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை ஏப்.30-ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT