தமிழகம்

1000 டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யவே ஒப்பந்தம்: வதந்திகளுக்கு வேதாந்தா விளக்கம்

செய்திப்பிரிவு

வேதாந்தாவில் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான ஆக்சிஜனை மட்டுமே உருவாக்கமுடியும் என சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவிய நிலையில், 1000 டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதாகவே ஒப்புக்கொண்டுள்ளோம் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிராண வாயு தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் பிராண வாயு ஆலையை மட்டும் 4 மாதங்களுக்கு இயக்க முடிவு எட்டப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகள் சார்பில் ஆதரவும், சிலர் நெருடலுடன் ஆதரவும் இன்னும் சில பகிரங்க எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வேதாந்தாவில் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான ஆக்சிஜனை மட்டுமே உருவாக்கமுடியும் என சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவியது.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யவே ஒப்புக்கொண்டுள்ளோம். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கிவிட்டு பின்னரே மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது என்றும் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

மேலும், உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜனை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT