ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்குதல் குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கரோனா பெருந்தொற்றுச் சூழலில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மலிவு விலையில் சுத்தமான உணவு வழங்கும் நடைமுறை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் வேறு சில இடங்களிலும் மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும், அதற்காக சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்தும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில், ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஏழைகளுக்கு உதவும் வகையில், குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சில பாண்லே கடைகளிலேயே உணவு வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், நிதித்துறைச் செயலர் அஷோக்குமார், நலத்துறைச் செயலர் உதயகுமார், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூவா கார்க் மற்றும் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோர் கலந்து கொண்டனர் .