தமிழகம்

வேளாண் சட்டத்துக்கு எதிராக டிராக்டர் பேரணி: பூண்டி கலைவாணனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்

செய்திப்பிரிவு

வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிரான டிராக்டர் பேரணி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கலைவாணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் தோழமைக் கட்சிகளுடன் டிராக்டர் பேரணி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை அனுமதியின்றி நடத்தியது, அதனைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டிராக்டர் கொண்டு ஏற்றி பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தல், இதில் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் இருவருக்கு கட்டை விரல் மற்றும் சுண்டு விரலில் காயம் ஏற்பட்ட காரணத்திற்காக கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், உணர்வுகளை வெளிப்படுத்த அடிப்படை ஜனநாயக உரிமையின் கீழ் கூடியதை, அரசியல் நோக்கங்களுக்காகக் காவலர்களுக்கு ஏற்பட்ட சிறு கீறல்களை கொலை முயற்சி எனக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரி முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட 6 பேரும் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், விசாரணைக்குத் தேவைப்படும் நேரங்களில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT