பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை; உதவிக்கு 104-ஐ அழைக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கோவிட்-19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடையத் தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT