தமிழகத்தில் கரோனா தொற்றின் தினசரி பாதிப்பு மே மாதத்தில் 19 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தெரிவித் துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றின் 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினசரிபாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தைகடந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேர்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், நாளுக்குநாள் தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
இதனிடையே, தமிழக அரசின் மருத்துவ நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் 1.3 சதவீதமாக உள்ள கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே மாதத்தில் தினசரிபாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் தொற்று பரவல் போக்கை மாற்றலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘கரோனா வைரஸைவிட நீங்கள்புத்திசாலி என நினைக்க வேண்டாம்.கரோனா வைரஸுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்து விட்டன. தடுப்பூசி போடுங்கள். முகக் கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.