கரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு. 
தமிழகம்

கொல்லிமலை சுற்றுலா தலத்தில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு பயணிகள் செல்ல தடை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதால் கொல்லிமலை ஆகாய கங்கைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுவெளிகளில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

அதுபோல மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், ஜேடர்பாளைம் தடுப்பணை பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடை சீஸன் தொடக்கம் என்பதால் விடுமுறை தினங்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொல்லிமலையின் அழகை கண்டு ரசிக்க வருவது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் கொல்லிமலையின் முக்கிய சுற்றுலாத் தலமான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீராடிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க கொல்லிமலை ஆகாய கங்கைக்கு பயணிகள் செல்ல கடந்த 20-ம் தேதி முதல் வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும், இதற்கான அறிவிப்பு மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டு, அங்குள்ள சோதனை சாவடி மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT