தமிழகம்

ஆணவக்கொலை செய்ய பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகப் புகார்: புதுக்கோட்டை பெண் காவலர் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கி.மகாராஜன்

பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண், ஆணவக் கொலை செய்வதற்கு வாய்ப்பிருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த ரம்யா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நானும் சுரேந்தர் என்பவரும் காதலித்தோம். கடந்தாண்டு ஏப்ரல் 10-ல் சுரேந்தர் வீட்டிற்குச் சென்றேன். மறுநாள் சுரேந்தர் உறவினர்கள் முன்னிலையில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

என் கணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் எங்கள் காதலை என் குடும்பத்தினர் ஏற்கவில்லை. அந்த எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் எனது குடும்பத்தினர் எங்களை ஆணவக் கொலை செய்வதற்கு வாய்ப்புள்ளது.

என்னையும், என் கணவரையும் கொலை செய்யும் நோக்கத்தில் வெளியாட்கள் கண்காணித்து வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை பாதுகாப்பு வழங்கவில்லை. எனவே எனக்கும், கணவருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்து, மனு தொடர்பாக மனுதாரரின் சித்தப்பா மற்றும் கணவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17-க்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT