தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்குஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று2-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுபோல், தற்போதும் பல தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு போதிய படுக்கைகளை ஒதுக்கவில்லை. இந்நிலையில், தமிழகம்முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மொத்தமுள்ள படுக்கைகளில் குறைந்தபட்சம் 50சதவீதம் படுக்கைகளை கரோனாசிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிறுவனச் சட்டம் மற்றும் மாநில மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவு:
கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழலில், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமாகிஉள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில்குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கென ஒதுக்க வேண்டும்.
அதேபோன்று, அவசரமில்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளை அனுமதிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மருத்துவமனை நிர்வாகங்கள், கரோனா சிகிச்சை தொடர்பான விவரங்களை மாவட்டஇணை சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ நாள்தோறும் தெரிவிக்க வேண்டும்.
அதுகுறித்த விவரங்களை https://stopcorona.tn.gov.in/ இணையப் பக்கத்திலும் பதிவேற்றவேண்டும். கரோனா சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.