கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி, சந்திரசேகர் ராவ் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் எனப் பலரும் முதல் அலையில் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையிலும் பலரும் இலக்காகி வருகின்றனர்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியிலும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எனப் பல தலைவர்கள் பாதி்க்கப்பட்டனர். மேலும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று (ஏப். 20) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டேன். அவர் விரைவில் குணமடைந்து முழு நலம் பெற விழைகிறேன்.
அனைவரும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் குணமடைந்து முழு நலம் பெற விழைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.