மதுரை அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளில் எலிகள் கடிப்பதால் நோயா ளிகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைகள், ரயில்வே, இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மையம் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இம்மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவலால் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற் றப்பட்டது. அங்கு 650-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். கடந்த 6 மாதங்களாக மதுரையில் கரோனா தொற்று குறைந்ததால் 50-க் கும் குறைவானவர்களே இந்த மருத் துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதனால், இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வழக்கம்போல் உயிர் காக்கும் சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர்.
ஆனால், எந்த நேரத்திலும் கரோனாவின் 2-வது அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் தொடர்ந்து இயங்கியது. இந்நிலையில், மதுரையில் கரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தின மும் 200-க்கும் மேற்பட்டோர் இத் தொற்றால் பாதிக்கப்படுவதால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 450-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகள் நிரம்பி வழிவதால் நோயாளிகள் தற்போது மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குப் படையெடுக்கின்றனர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டுகளில் கடந்த சில வாரங்களாக எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கொசுக் கடி, புழுக்கத்தால் கரோனா தொற்றுடன் போராடும் நோயாளிகள், தற்போது எலிகளுடனும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு எலிகள் நோயாளிகளின் கை, கால்களைக் கடிக்கத் தொடங்கியுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து நோயாளிகள் கூறுகை யில், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன் சர்க்கரை நோயால் காலில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு நோயாளி சிகிச்சைக்கு வந்தார். கரோனா தொற்று பாதிப்பால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது காலில் இருந்த காயத்தில் எலி கடித்துவிட்டது. வலியால் துடித்த அவர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கும் மறுநாள் ஏற்கெனவே கடித்த காலிலேயே எலி கடித்தது. பாதிக்கப்பட்ட அந்த நோயாளியும், மற்றவர்களும் பணியில் இருந்த செவிலியரிடம் புகார் செய்தனர். நோயாளிகளைக் கடிக்கும் எலிகளை அழிக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.
டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘அப்படி எலித் தொல்லை ஏதும் வார்டு களில் இல்லை,’’ என்றார்.