குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில் தேங்கியுள்ள குப்பை. 
தமிழகம்

ஊராட்சி பகுதிகளில் அதிக அளவில் குப்பை தேக்கம்- அனைத்து பகுதிகளிலும் ‘மாஸ் கிளீனிங்’ செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் சாக்கடை தூய்மைப்படுத்தப்படாமல், சாலைகளில் குப்பை அகற்றப்படாமல் பல இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. இதைத் தவிர்க்க அனைத்து பகுதிகளிலும் 'மாஸ் கிளீனிங்' செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 100 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் எங்குமே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் குப்பையை சரிவர அகற்றுவதில்லை. எங்கு பார்த்தாலும் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், அப்பகுதியில் வரும் மாடுகள், நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளைத் தேடி இந்த குப்பையை கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து தெருவில் நடந்து செல்வோர் மீது விழுகிறது.

இதனால், கொசு உற்பத்தியாகி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் மாஸ் கிளீனிங் முறையை நடைமுறைப்படுத்தி ஊராட்சிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊராட்சி பகுதிகளில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த மாஸ் கிளீனிங் நடைபெறவில்லை. மாஸ் கிளீனிங் பணியால் சுத்தம், சுகாதாரம் சிறப்பாக இருந்தது. இப்பணியை நிறுத்தியதால் பல ஊராட்சிகள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.

தெருக்களில் குப்பை அகற்றம் மற்றும் ரோட்டிலுள்ள கற்கள், செடி, கொடிகள் அகற்றம் போன்ற பணிகள் நடைபெறவில்லை. மாஸ் கிளீனிங் பணியை ஊராட்சிகளில் தொடங்க வேண்டும். இது கரோனாவை வெல்லவும் வாய்ப்பாக அமையும். அண்மையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது போல் இங்கும் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT