செய்யாறு அருகே ஆடு மேய்க்க சென்ற அண்ணன், தம்பி ஆகியோர் ஏரியில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சின்னசெங்காடு கிராமத்தில் வசிப்பவர் முனுசாமி. இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளி. இவரது மகன்கள் பாஸ்கரன்(9), ஹரிஹரன்(6). இவர்கள் இருவரும், தனது பெற்றோர் வளர்க்கும் ஆடுகளை மேய்க்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர்.
காலையில் சென்றவர்கள் மதிய உணவுக்கு வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் சிறுவர்களை தேடி சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில், சிறுவர்களின் செருப்பு, ஆடு மேய்க்க பயன்படுத்தப்படும் தொரட்டி இருந்துள்ளது. இதையடுத்து ஏரியில் குதித்து சிறுவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்துக்கு ஏரியில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், சிறுவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அனக்காவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.