பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு; புதிதாக 663 பேர் பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.53 லட்சம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 18) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 5,070 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 497 பேருக்கும், காரைக்காலில் 80 பேருக்கும், ஏனாமில் 35 பேருக்கும், மாஹேவில் 51 பேருக்கும் என, மொத்தம் 663 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரியில் 37 ஆயிரத்து 140 பேர், காரைக்காலில் 5,628 பேர், ஏனாமில் 2,420 பேர், மாஹேவில் 2,583 பேர் என, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 796 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,672 பேர் என, மொத்தம் 4, 468 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 282 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 595 (89.16 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரத்து 880 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 லட்சத்து 62 ஆயிரத்து 541 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 30 ஆயிரத்து 171 (72 நாட்கள்) சுகாதாரப் பணியாளர்கள், 17 ஆயிரத்து 931 (60 நாட்கள்) முன்களப் பணியாளர்கள், 1 லட்சத்து 5 ஆயிரத்து 642 (44 நாட்கள்) பொதுமக்கள் என, 1 லட்சத்து 53 ஆயிரத்து 744 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT