சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை யில் ஒருங்கிணைப்பு இல்லாததால் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிக்கு செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் ஏப்.14 முதல் ஏப்.16-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.
இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவ மனைகள், நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத் துறையினர் இடையே ஒத்துழைப்பு இல்லாததால் தடுப்பூசி இருந்தும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்குச் செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் சில தினங்களாக தடுப்பூசி இல்லை எனக் கூறி மக்களை முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக் கின்றனர்.
முத்தனேந்தல் சுகாதார நிலையத்துக் குச் சென்று வர போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் ரூ.200 செல வழித்து ஆட்டோக்களில் மக்கள் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் சுகாதாரத் துறையினர் தடுப்பூசி மருந்துகளை போதிய அளவு அனுப்பவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் சுகாதாரத் துறையினரோ தேவையானவற்றை மருத்துவத்துறையினர் கேட்டுப் பெற வில்லை என்று கூறுகின்றனர்.
சுகாதாரத் துறை, மருத்துவத் துறையினர் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறியதாவது: மாவட்டத்தில் 18 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்துகிறோம். சுகாதாரத்துறை யினர்தான் எங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்கின்றனர். தடுப்பூசி அனுப்புவதை பொருத்து செலுத்தி வருகிறோம். மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஏப்.15-ம் தேதி 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்.16-ம் தேதிக்கு (இன்று) 40 தடுப்பூசி மருந்து சுகாதாரத் துறையிடம் கேட்டுள் ளோம்,’ என்று கூறினார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாமணி கூறுகையில், ‘‘மாவட் டத்தில் 10 ஆயிரம் தடுப்பூசி மருந்து கள் இருப்பில் உள்ளன. அரசு மருத்துவமனைகள் கேட்கும் மருந்து களை அனுப்பி வருகிறோம்,’’ என்றார்.