சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணல் அள்ளுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வெடிகுண்டி வீசி விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்புவனம் அருகே துாதையைச் சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வைகை ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு அக்.3-ம் தேதி காலையில் முத்துராமலிங்கம் டிராக்டரில் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் முத்துராமலிங்கத்தை கொலை செய்தது.
இதுகுறித்து திருப்பாசேத்தி போலீஸார் வழக்கு பதிந்து தட்சிணாமூர்த்தி (30), அறிவழகன் (29), சேங்கைச்சாமி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போதே தட்சிணாமூர்த்தி, அறிவழகன் இறந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம்சாட்டப்பட்ட சேங்கைசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.