விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும், அவர் உயிரிழந்ததையும் தொடர்புப்படுத்த வேண்டாம் என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத்துக்கு உட்பட்ட 6 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), பி.கே.வைரமுத்து (திருமயம்), வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்(புதுக்கோட்டை), தர்ம.தங்கவேல் (ஆலங்குடி), ஜெயபாரதி (கந்தர்வக்கோட்டை), மு.ராஜநாயகம் (அறந்தாங்கி) ஆகியோர் இன்று (ஏப். 17) பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி வேட்பாளருமான சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
"நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி எடுத்தது குறித்து அரசு சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கரோனா தடுப்பூசியால் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய நேரம் இது.
உலகளவில் கரோனா வேகம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கைதான் அவசியம். எனவே, தடுப்பூசியால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா என்ற கேள்வியையே தவிர்ப்பது நல்லது.
அரசின் மீதும், தடுப்பூசி மீதும், மருத்துவர்கள் மீதும் நம்பிக்கைதான் அவசியம். விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும், அவர் உயிரிழந்ததையும் தொடர்புப்படுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து.
களத்தில் பணிபுரிய தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாகத்தான் ஆய்வு உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை.
தமிழகத்துக்கு ரெம்டிசிவர் மருந்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன்.மேலும், தமிழகத்தில் உள்ள தற்போதைய கரோனா நிலை குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளேன்.
எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், மாற்று சிந்தனைக்கு வழிவிடாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒரு சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வருகின்ற 2, 3 வாரங்களுக்கு முகக்கவசம் அணியவில்லை என்றால் கரோனா பரவல் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத அளவுக்கு வலுவான சுகாதார கட்டமைப்பை தமிழகத்தில் அரசு செய்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.