தமிழகம்

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் எதிர்த்துப் போராட உரிமை உண்டு: வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்படப் பலர் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின்போது கடையின் மீது கல் வீசித் தாக்கியதாக கடையின் விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது, கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமானத்தைப் பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அந்தக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு எனக் கூறி, மனுதாரர் உட்பட 10 பெண்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT