தமிழகம்

வெப்பச் சலனம்; அடுத்த 2 நாட்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலை, தென் மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த இரண்டு தினங்களுக்கு ஏப்ரல் 16, ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19 வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

கோவில்பட்டி (தூத்துக்குடி) 9 செ.மீ., மஞ்சளாறு (தஞ்சாவூர்), நத்தம் (திண்டுக்கல்) தலா 7 செ.மீ., மதுரை விமான நிலையம் 6 செ.மீ., சாத்தூர் (விருதுநகர்) காரியாபட்டி (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை) பெருந்துறை (ஈரோடு), தலா 5 செ.மீ., எட்டயபுரம் (தூத்துக்குடி) பெரம்பலூர் விருதுநகர் தலா 4 செ.மீ., மருங்காபுரி (திருச்சி) மானாமதுரை (சிவகங்கை) பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஏப்ரல் 16 (இன்று) தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT