கோடைவாசஸ்தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வந்தடைந்தார்.
கொடைக்கானலில் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
காலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி துர்கா, மகன் உதயநி திஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 16 பேருடன் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.
அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வந்தடைந்தார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு கொடைக்கானலுக்கு தனது மனைவி துர்காஸ்டாலினுடன் வருகை தந்து ஓய்வு எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்கவந்துள்ளார்.
கடந்தமுறை வந்தபோது ஏரியில் நடைப்பயிற்சி, குடும்பத்தினருடன் படகுசவாரி செய்தார்.
இந்தமுறை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். இதன்பின் சென்னை திரும்ப உள்ளனர். குடும்பத்தினர் ஓய்வுக்காக வந்திருப்பதால் கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.