மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், திமுக சரிவைச் சந்திக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். பேட்டி முடிந்து சென்ற அவரிடம் ஒரு மூதாட்டி துணிச்சலாகப் பேசினார். அப்போது அவரிடம், ''ஐயா ஸ்டாலின்தான் முதல்வராக வருவார்'' என்று மூதாட்டி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்று பேட்டி அளித்தார். அவர் பேட்டி அளித்தபோது அருகில் ஒரு மூதாட்டி நின்று கவனித்துக் கொண்டிருந்தார்.
பேட்டி அளித்து முடித்தவுடன் அனைவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் புறப்பட்டார். அப்போது அந்த மூதாட்டி, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வணக்கம் வைத்தார். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
''ஐயா, மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வர வேண்டும், எங்க கஷ்டம் எல்லாம் தீர வேண்டும்'' என்று மூதாட்டி கூறினார். ''அம்மா கிட்டயும் சொல்லுங்க'' என்று கோயிலை நோக்கி பொன்.ராதாகிருஷ்ணன் கை காட்டினார். அந்த மூதாட்டி, ''அம்மா கிட்ட பேசிட்டுதான் வர்றேன். ஸ்டாலின்தான் முதல்வராக வருவார்'' என்று சொன்னார். அதற்கு, ''ரொம்ப சந்தோஷம்'' என்று கும்பிட்டுவிட்டு தனது காரை நோக்கி பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்று அறியாமல் மூதாட்டி அதிரடியாக வந்து தனது கருத்தைத் தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணனும் அவரது ஆர்வத்தை உணர்ந்து சரி அம்மா என்று சொல்லிவிட்டு பெருந்தன்மையுடன் நகர்ந்தார். இது சுமுகமாக நடந்தாலும், மூதாட்டியின் செயல் உடனிருந்த பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.