சென்னை அண்ணா நகரில்உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றுபவர் சரவணன் (31). இவர் கடந்த 12-ம் தேதி மதியம் 2.45 மணி அளவில் தனது நிறுவன அதிகாரிகள் கொடுத்தனுப்பிய ரூ.40 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை (சவுதி ரியால்) தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
தெற்கு போக் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சாலையோரத்தில் மயங்கிவிழுந்துள்ளார். இதை பார்த்து, அருகே இருந்தவர்கள் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சரவணனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, கண் விழித்த சரவணன், தன்னிடம் இருந்த ரூ.40 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, சரவணன் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாளர் சுதீஷ் , மாம்பலம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார். ரூ.40 லட்சம் மதிப்பிலான சவுதி ரியாலை திருடியது யார்என்று தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.