பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

உரிய ஒப்புதல் இன்றி தண்ணீர் எடுக்க தனியார் லாரிகளை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தனியார் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், உரிய ஒப்புதல்களைப் பெறாமல் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தென்சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 425 பேர், 2 ஆயிரம் லாரிகள் மூலம், சென்னை மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் சப்ளை செய்து வருகிறோம்.

சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும்போது, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாகக் கூறி அதிகாரிகள், எங்கள் உறுப்பினர்களைத் துன்புறுத்துவதால், தண்ணீர் எடுத்துச் செல்லும் எங்கள் சங்க உறுப்பினர்களின் தண்ணீர் லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தண்ணீர் எடுக்கவும், கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களைப் பெற்ற லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் அதுபோல ஒப்புதல்களைப் பெற்றுள்ளனரா? என்பதைத் தெரிவிக்காததால் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் உரிய ஒப்புதல்களைப் பெற்றுள்ளனர் என முடிவுக்கு வர எந்த அடிப்படையும் இல்லாததால், தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், உரிய ஒப்புதல்களைப் பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள், அதற்கான ஆதாரங்களுடன் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT