கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள, அதற்கான மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள,இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. கரோனா பரவல் அதிகமாக இருப்பதால், அரசு மற்றும் தனியார் மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆரம்பத்தில் பலரிடம் தயக்கம் இருந்தது. ஆனால், தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக அளவில் வருகின்றனர். இதனால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, தடுப்பூசி மையங்களை அதிகரிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவேக்சின் முதல் தவணை போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணையும், கோவிஷீல்டு முதல் தவணை போட்டு 8 வாரத்துக்குள் 2-வது தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது. அரசு அனுமதி அளித்தவர்கள் தவறாமல் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும்” என்றார்.
கோவேக்சின் முதல் தவணை போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணையும், கோவிஷீல்டு முதல் தவணை போட்டு 8 வாரத்துக்குள் 2-வது தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது.