மணச்சநல்லூரில் அனுமதியில்லாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை அமைக்க தடை கோரிய வழக்கில், சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மண்ணச்சநல்லூர் மணியங்குறிச்சியில் திருச்சி- பெரம்பலூர் இணைக்கும் 13 அடி சாலையில் அரசிடம் அனுமதி பெறாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அமைக்கப்படும் பகுதி அரசு பொது இடமாகும். இங்கு சிலை அமைத்தால் இந்த வழியாக பல்வேறு இடங்களுக்கு விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
எனவே, மணியங்குறிச்சியில் திருச்சி- பெரம்பலூர் இணைப்பு சாலையில் சிலைகள் அமைக்க தடை விதித்து, சிலை அமைக்க அனுமதி வழங்ககக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. சாலைகள், நடைபாதைகளில் அனுமதி பெறாமல் சிலை அமைத்தால் கடும் நடவடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு 2017-ல் அரசாணை பிறப்பித்துள்ளது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
மனுதாரர் கோரிக்கையில் பொதுநலன் உள்ளது. எனவே மனுதாரரின் மனு மீது திருச்சி மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அரசாணை அடிப்படையில் 6 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.