அதிகரிக்கும் கரோனா இரண்டாவது அலையை தடுக்க ஒன்றுபட்டு போராடுவோம், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைத்து முகக்கவசம், தடுப்பூசி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“கோவிட் -19 தொற்று இரண்டாவது அலை காரணமாக இந்தியா தற்போது மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளவேண்டும்.
முக்கியமாக வீட்டிலுள்ள வயதானவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும், சானிடைசர், சோப்பு மூலம் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கோவிட் 19 அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், தமிழக மக்களின் ஒத்துழைப்பையும் பாராட்டும் அதே வேளையில், இந்த சூழ்நிலையை சமாளிக்க தமிழக அரசு வழங்கிய அறிவுறுத்தல்களை, கட்டுப்பாடுகளை அனைவரும் ஒத்துழைத்து பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வாருங்கள்”.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் வைத்துள்ளார்.