முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அசுவரமட்டம் வனப்பகுதியில் விடப்பட்ட யானை. 
தமிழகம்

தருமபுரியில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட ஒற்றை காட்டு யானை; அதிகாலை முதுமலையில் விடப்பட்டது

ஆர்.டி.சிவசங்கர்

தருமபுரியில் பொதுமக்களை அச்சுறுத்தியதால் மயக்க மருந்து கொடுத்துப் பிடிக்கப்பட்ட யானை, இன்று முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது.

தருமபுரி, பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஏரியூர் பகுதியில் பதனவாடி காப்புக்காடு உள்ளது. இதையொட்டிய கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு ஒற்றை ஆண் யானை ஒன்று இடம்பெயர்ந்து வந்தது. சுமார் 20 வயதுடைய இந்த யானை, பதனவாடி காப்புக்காட்டை ஒட்டி காவிரிக்கரையில் அமைந்துள்ள ஒட்டனூர், முத்தரையன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வந்தது. இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் நுழைந்து ராகி, மா, வாழை போன்ற பயிர்களைச் சேதம் செய்து வந்தது. 3 மாடுகளைத் தாக்கிய இந்த யானை இருசக்கர வாகனம் ஒன்றைத் தூக்கி வீசி சேதப்படுத்தியது.

இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். மேலும், யானையை விரைந்து வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்குக் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே நேற்று (ஏப்.7) காலை வனத்துறையினர் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பிடிபட்ட யானை, லாரியில் ஏற்றப்பட்டு நீலகிரி மாவட்டம் முதுமலைக்குக் கொண்டு வரப்பட்டது.

லாரி நேற்று இரவு கோத்தகிரியைக் கடந்து, முதுமலைக்கு இன்று அதிகாலை வந்து சேர்ந்த நிலையில், முதுமலை வெளிவட்டப் பகுதியான அசுவரமட்டம் வனப்பகுதியில் யானை விடப்பட்டது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''தருமபுரியில் பிடிக்கப்பட்ட யானை, முதுமலை புலிகள் காப்பகம் அசுவரமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. யானை நல்ல உடல் நிலையுடன், இயல்பாக உள்ளது. வனத்துறையினர் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் என்றாலும், வனவிலங்குகளின் தேவைக்காக 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளம் வெட்டப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யானைக்கு உடல் மற்றும் தண்ணீர் பிரச்சினை இல்லை'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT